விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை..!

பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், விடைத்தாள் திருத்தம் மையத்திற்கு உள்ளே வரும் ஆசிரியர் பணி முடியும் வரை வெளியே செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.மாணவர்களுக்கான மதிப்பெண்களை அதிகமாகவோ அல்லது குறைத்தோ வழங்கக்கூடாது என்றும், முறையாக மதிப்பீடு செய்து சரியான மதிப்பெண்களை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடைத்தாள் மதிப்பீடுகளில் தவறு நேர்ந்தால் விடைத்தாள் திருத்தப்பணி மையத்திற்கு பொறுப்பாக உள்ள ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடைத்தாள் திருத்தும்போது செல்போன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் 79 மையங்களில் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.