பிரதமர் மோடி சென்ற வாகனம் மீது செல்போன் வீசபட்டதால் பரபரப்பு

மைசூரு நகரில் பிரதமர் மோடி ஊர்வலமாக பிரச்சாரம் செய்த போது பூக்களுடன் செல்போன் வீசபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் மோடி நேற்று முதல் கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் பெங்களூருவில் சாலையில் ஊர்வலமாக சென்று பிரச்சாரம் செய்த நிலையில் நேற்று இரண்டு பொதுக்கூட்டங்களை முடித்துக் கொண்டு மாலையில் மைசூரு நகரில் சாலை மார்க்கமாக ஊர்வலமாக சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். வழி நெடுகிலும் பாஜக தொண்டர்கள் மோடியை வரவேற்க சாலையின் இருபுறமும் நின்று கொண்டு அவர் மீது பூக்களை வீசிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு இடத்தில் பூக்களுடன் சேர்ந்து பிரதமர் வாகனத்தின் மீது செல்போன் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக தொண்டர் பூக்களை வீசும் போது தவறுதலாக பூக்களுடன் செல்போன் பிரதமர் வாகனத்தின் மீது விழுந்ததா அல்லது வேண்டுமென்று மர்ம நபர்கள் செல்போனை வீசினார்களா என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

பிரதமரை நோக்கி செல்போன் வீசப்பட்ட போதும் அது அவர் மேல் விழாமல் வாகனத்தின் முன் பகுதியில் விழுந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.