4 வயது சிறுமிக்கு பள்ளி வளாகத்திலேயே பாலியல் சீண்டல்.. பியூன் கைது!

4 வயது சிறுமி பள்ளியில் பாலியல் சீண்டலுக்கு ஆளான அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

டெல்லி ரோஹினி பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது 4 வயது மகளை கடந்த மே மாதம் அருகே உள்ள பள்ளியில் சேர்த்துள்ளார். இந்நிலையில், கடந்த மே 9ஆம் தேதி அன்று சிறுமி பள்ளி மைதானத்தில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு ப்யூனாக வேலை பார்க்கும் 43 வயது நபரான சுனில் குமார் சிறுமியை தனியாக அழைத்து சென்றுள்ளார்.

பின்னர், சிறுமியை பாலியல் ரீதியாக சீண்டி தொல்லை கொடுத்துள்ளார். பயந்து போய் சிறுமி அழத் தொடங்கிய நிலையில், இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். மாலை வீடு திரும்பியதும் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் தனக்கு நேர்ந்த அவலத்தை கூறியுள்ளார்.

தனக்கு தொல்லை கொடுத்த நபருக்கு பெரிய மீசை இருந்தது என அடையாளம் கூறியுள்ளார். அதன்பேரில் சிறுமியின் தாயார் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கவே, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது.

பள்ளிக்கு வந்து விசாரித்ததில் அவர் அங்கு 13 ஆண்டுகளாக பணிபுரியும் ப்யூன் சுனில் குமார் என்பது உறுதி செய்யப்பட்டது. இவர் சுல்தான்பூரி பகுதியில் வசித்து வருகிறார். சுனில் குமாரை கைது செய்த காவல்துறை அவரை சிறையில் அடைத்தது. இவர் இதற்கு முன்னர் வேறு சிறுமிகளுக்கு இதுபோல தொல்லை கொடுத்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.