திருகோணமலையில் புதிதாக புத்தர் சிலை! – தாய்லாந்திலிருந்து பிக்குகள் வருகை.

திருகோணமலை நகரில் நெல்சன் திரையரங்குக்கு முன்னால் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள இடத்தில் 4 அடி உயரமான புத்தர் சிலை நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை வைக்கப்படவுள்ளது.

2,700 ஆண்டுகளுக்கு முன் தாய்லாந்திலிருந்து திருகோணமலைக்கு வந்து இறங்கியதாக கூறப்படும் பிக்குகளை நினைவுகூரும் முகமாகவும், அவர்களைக் கௌரவப்படுத்தும் முகமாகவும் அவர்கள் வந்து இறங்கியதாக மகாவம்சத்தில் கூறப்படும் திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் உள்ள தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் குறித்த நிகழ்வு நாளைமறுதினம் காலை இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் தாய்லாந்தில் இருந்து புத்தர் சிலையோடு வருகை தருகின்ற 50 பிக்குகள் பங்குகொள்ளவுள்ளனர்.

தாய்லாந்திலிருந்து நாளை சனிக்கிழமை திருகோணமலைக்கு வருகை தருகின்ற 50 பிக்குகளும் நிலாவெளியில் விடுதி ஒன்றில் தங்குவார்கள்.

அவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு கடற்படைதளத்துக்குச் சென்று காந்தி சுற்றுவட்டப் பகுதியில் கடல் வழியாக வந்து இறங்கி பின்னர் பாத யாத்திரை மூலமாக நெல்சன் திரையரங்கு முன்னால் உள்ள 4 அரச மரங்கள் இருக்கின்ற இடத்துக்குச் செல்லவுள்ளனர்.

அங்கு தாய்லாந்திலிருந்து அவர்களால் கொண்டுவரப்படுகின்ற 4 அடி உயரமான புத்தர் சிலையை அவ்விடத்தில் வைத்து ஒரு மணித்தியால பிரித் நிகழ்வு இடம்பெறும்.

அது நிறைவு பெற்றதும் ஜெயசுமராம விகாரைக்குச் சென்று அங்கிருந்து முற்பகல் 11.30 மணியளவில் கண்டி நோக்கிய பாதயாத்திரையை அவர்கள் தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் சமாத ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்த காலகட்டத்தில், 2005ஆம் ஆண்டு திருகோணமலை நகரில் புத்தர் சிலை வைக்கப்பட்டமையால் பெரும் கலவரம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.