ரன் அவுட்டில் சொதப்பிய லக்னோ… எளிதாக வெற்றியை ருசித்தது மும்பை அணி.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் குர்ணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது.

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 11 ரன்னிலும், இஷான் கிஷன் 15 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். இந்த சரிவுக்குப் பின் கேமரான் கிரீன், சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. 11வது ஓவரில் அணியின் ஸ்கோர் 104 ஆக இருந்தபோது, சூர்யகுமார் யாதவ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் கேமரான் கிரீன் அவுட் ஆனார்.

அவர் 23 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 41 ரன்கள் விளாசினார். திலக் வர்மா 26 ரன்களிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், கிறிஸ் ஜோர்டான் 4 ரன்னிலும், நேஹல் வதேரா 23 ரன்களிலும் ஆட்டமிழக்க, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

யஷ் தாகூர் 3 விக்கெட்டுகள், மோஷின் கான் ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் 40 ரன்கள் எடுத்த நிலையில், 2 ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன் அவுட் ஆனார்.

தொடர்ந்து, மயேர்ஸ் 18 ரன்களிலும், குருணல் பாண்டியா 8 ரன்களிலும், பிரேராக் மாங்கட் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 ரன்களிலும், கிருஷ்ணப்பா கவுதம் 2 ரன்களிலும், ஆயுஷ் பதோனி ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். நிக்கோலஸ் பூரன் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. தீபக் ஹூடாவும், கிருஷ்ணப்பா கவுதமும் சொர்ப்ப ரன்னில் ரன் அவுட் ஆகினர்.

அடுத்தடுத்து 3 ரன் அவுட் லக்னோவிற்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தியது. 15.5 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் மட்டுமே லக்னோ எடுத்திருந்தது. 31 பந்துகளில் 83 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் லக்னோ தொடர்ந்து விளையாடியது.

நவீன் உல் அக் மற்றும் மோஹ்சின் கான் களமிறங்கினர். இதில், நவீன் உல் அக் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மோஹ்சின் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மேத்வால் 5 விக்கெட்டுகளும், கிரிஷ் ஜோர்டான் மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் லக்னோ அணி 16.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 101ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன்மூலம், மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது.

இதனால், லக்னோ அணி தொடரில் இருந்து வெளியேறுகிறது. நேற்று பிளே ஆப் சுற்றில் தோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் குவாலிபையர் 2-ல் மும்பை அணி எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.