‘பைபோர்ஜாய்’ புயல் இன்று மாலை கரையை கடக்கும்.. கடலோர மாவட்டங்களிலிருந்து 50,000 பேர் வெளியேற்றம்…!

குஜராத்தில் ‘பைபோர்ஜாய்’ புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில், கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 50,000 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

அரபிக்கடலில் உருவான பைபோர்ஜாய் புயல், குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, ஜாம்நகர், துவாரகா, ராஜ்கோட் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. புயல் கரையைக் கடக்கும் போது அதன் வேகம் மணிக்கு 125 முதல் 135 கிலோ மீட்டர் ஆக இருக்கும் என்றும் அதிகபட்சமாக 150 கிலோமீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தற்போது இந்த புயலானது, குஜராத்தின் ஜகாவ் துறைமுகத்தில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தென் – மேற்கு பகுதியில் உள்ளது. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதையொட்டி, கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.

இதே போன்று, பாகிஸ்தான் கராச்சிக்கு தெற்கே 330 கிலோ மீட்டர் தொலைவில் ’பைபோர்ஜாய்’ புயல் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, அனைத்து வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு எரிவாயு விநியோகத்தை அந்நாட்டு அரசு நிறுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.