வலிகாமம் வடக்கில் திருடர்களுக்குத் துணைபோகும் இராணுவம்! – மக்கள் குற்றச்சாட்டு.

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்படவுள்ள பகுதிகளுக்குள் திருடர்கள் ஊடுருவி, பொருள்களைத் திருடிச் செல்வதாக காணி உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

காங்கேசன்துறை மாங்கொல்லை மற்றும் தென்மயிலை ஆகிய பகுதிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். இருப்பினும் அவை காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இந்நிலையில் தமது காணிக்குள் வெளியாட்கள் சிலர் நடமாடுவது தொடர்பில் அறிந்து அவர்கள் தமது காணிக்குச் சென்ற போது, உயர் பாதுகாப்பு வலய வேலிக்கு உள்ளே வாகனங்களுடன் நடமாடும் திருடர்கள் காணிக்குள் திருட்டுக்களில் ஈடுபடுவதனை அவதானித்துள்ளனர்.

உயர் பாதுகாப்பு வலயத்தினுள் வாகனங்களுடன் சென்று பொருள்களை களவாடுகிறார்கள் என்றால் நிச்சயம் அவர்களுக்கு இராணுவத்திடம் செல்வாக்கு இருக்கும். அது தொடர்பில் இராணுவத்தினரிடம் முறையிடச் சென்றால் தமக்கு ஆபத்து ஏற்படலாம் என்று காணி உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்தனர்.

தமது கண் முன்னே பொருள்களை களவாடி செல்பவர்களை, எதுவும் செய்ய முடியாது இயலாமையுடன் பார்த்துக்கொண்டு, காணி விடுவிப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாக காணி உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.