மட்டக்களப்பில் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் மரணம்!

மட்டக்களப்பில் நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாந்தாமலை முருகன் ஆலய வழிபாட்டுக்குச் சென்ற குறித்த இளைஞர், தாந்தாமலை குளத்தில் நீராடியபோது நீரில் மூழ்கிய நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது இடைநடுவில் உயிரிழந்தார் என்று கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி, எருவில் – காளிகோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய மோகனசிங்கம் பிரகதீசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

தாந்தாமலை முருகள் ஆலய வருடாந்தத் திருவிழா இடம்பெற்றுவரும் நிலையில் நேற்று (26) களுவாஞ்சிக்குடி – எருவில் பிரதேச மக்கள் ஆலய வழிபாட்டுக்கு சென்றனர்.

இதன்போது அங்கு சென்ற குறித்த இளைஞரும் அவரது நண்பர்களுமாக தாந்தாமலை குளத்தில் நீராடியபோது குறித்த இளைஞர் ரிழ் முழுகியதையடுத்து அவரை நண்பர்கள் காப்பாற்றி மகிழடித்தீவு வைத்தியசாலையில் சேர்த்தனர். அவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார்.

சடலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.