தேசப்பற்றை இந்திய இளைஞர்களிடம் இலங்கை இளையோர் கற்க வேண்டும்! – இப்படி விமல் உபதேசம்.

“தேசப்பற்று தொடர்பில் இந்திய இளைஞர்களைப் பார்த்து இங்குள்ள இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இந்தியாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து உரையாற்றும்போதே விமல் வீரவன்ச இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“எமது பக்கத்து நாடான இந்தியா சந்திரனுக்குச் சென்ற நான்காவது நாடாகியமை தொடர்பில் அந்த நாட்டுக்கு நாங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அதேபோன்று இந்தியாவின் அதிஷ்டமாக இவ்வளவு செலவு செய்து சந்திரனுக்குப் போகும் போது மலசலகூடமின்றி இத்தனை பேர் இருக்கின்றனர், வறுமையில் இத்தனை பேர் இருக்கின்றனர், படிக்காதவர்கள் இத்தனை பேர் இருக்கின்றனர் என்றெல்லாம் கூறி அந்த மகிழ்ச்சியைத் தடுக்கும் கீழ்த்தரமான கலாசாரம் இந்திய இளைஞர்களிடம் இல்லை. அது தொடர்பில் பெருமைப்பட வேண்டும். அவர்கள் எந்த இனம், குலமாக இருந்தாலும் இந்தியக் கொடியுடன் இந்திய தேசம் என்ற புதுமையான உணர்வுடன் இருக்கின்றனர். அதனை விடுத்து அங்குள்ள குறைகளைக் கூறிக்கொண்டு அதனைத் தடுக்கும் எண்ணத்தில் அங்குள்ளவர்கள் இல்லை.

எமது இளைஞர்களையும் இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துக்கொண்டு சந்திரனுக்குச் சென்ற நான்காவது நாடான இந்தியாவுக்கு எமது வாழ்த்துக்களையும் கௌரவத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.