எம்.பியின் வீடு முற்றுகை: இனவெறியைத் தூண்டும் செயல்; முளையிலேயே நசுக்க வேண்டும்! கண்டன அறிக்கையில் கூட்டமைப்பு வலியுறுத்து.

“இனவாதத்தை வேண்டுமென்றே தூண்டும் வகையில் கொழும்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் வீட்டுக்கு முன்பாகக் கடந்த இரண்டு தினங்களாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இனவெறியைத் தூண்டும் இவ்வாறான செயல்களை முளையிலேயே நசுக்க வேண்டும்.”

இவ்வாறு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குருந்தூர்மலைக்கு வந்து குழப்பம் விளைவிக்கின்றார் என்று குற்றம் சாட்டியுள்ள சிங்கள பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்கள், அவருக்கு எதிராகக் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளன. அந்தவகையில், கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் உள்ள கஜேந்திரகுமார் எம்.பியின் வீட்டுக்கு முன்பாக ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்ன தேரர் தலைமையிலான குழுவும், பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான குழுவும் கடந்த இரண்டு தினங்களில் அடுத்தடுத்துப் போராட்டங்களை நடத்தியுள்ளன.

இந்த மோசமான நடவடிக்கைகளைக் கண்டித்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.