பாதாளக் குழுக்களுக்கு முடிவுகட்டியே தீருவோம்! – அமைச்சர் திட்டவட்டம்.

பொறுப்புள்ள அரசு என்ற வகையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அரசு இடமளிக்காது என்றும், ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களம் தற்போது அரசியல் தலையீடற்ற நிறுவனமாக இயங்குகின்றது என்றும், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்குப் பொலிஸ் திணைக்களம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“பொலிஸ் அதிகாரிகளின் நியமனங்களின்போது, அரசியல் தலையீடுகள் இடம்பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த பொலிஸாரின் நலன்புரிச் சேவைகள் பலவற்றைத் தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

தற்போது இணையவழி ஊடாக கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு செயற்திறன் மிக்க சேவைகளை வழங்கும் நோக்கில் குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தில் செயற்படுத்தப்படும் தொழில்நுட்ப உபகரணங்களை நவீனமயப்படுத்த அவசியமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக அரச சார்பற்ற நிறுவனங்கள் பற்றி அதிகம் பேசப்படுகின்றது. இது தவிர இந்நாட்டில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், பதிவு செய்யப்படாத அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையில் இனிமேலும் செயற்பட முடியாது. இந்நாட்டில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தற்போது பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. அவர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்கின்றன. குறிப்பாக போதைப்பொருள் தொடர்பாக இடம்பெறும் மோதல்களே இவ்வாறு அவர்கள் குழுக்களாகப் பிரிந்து தாக்குதல்களில் ஈடுபடுவதற்குக் காரணமாக அமைகின்றது.

பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.

பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் செய்ய எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான பொலிஸ் விசாரணைகளுக்குக் கத்தோலிக்க திருச்சபையும் ஒத்துழைப்பு வழங்க முடியும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.