சமுர்த்தி உத்தியோகத்தர் எனக் கூறி வழிப்பறியில் ஈடுபட்டு வந்தவர் கைது!

சமுர்த்தி உத்தியோகத்தர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் ஆள் நடமாட்டம் குறைவான இடத்தில் பயணிக்கும் வயோதிபர்களை மறித்து, தன்னைச் சமுர்த்தி உத்தியோகத்தராக அறிமுக்கப்படுத்திக்கொண்டு உதவித் திட்டங்கள் வழங்கவுள்ளதாக அவர்களுக்குப் பேச்சைக் கொடுத்துச் சந்தர்ப்பம் பார்த்து அவர்களின் நகைகள் உள்ளிட்ட உடமைகளை வழிப்பறி கொள்ளையடித்துக்கொண்டு குறித்த நபர் தப்பிச் சென்றிருந்தார்.

இவ்வாறாக நான்கு சம்பவங்கள் பதிவாகி இருந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து நேற்றுப் புதன்கிழமை சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரிடம் இருந்து வழிப்பறி கொள்ளையடிக்கப்பட்ட 10 பவுண் நகைகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.