இரத்தத்தின் மேல் ஆட்சியமைத்த கோட்டாவும் பிள்ளையானும்! – சாணக்கியன் விளாசல்.

“கிறிஸ்தவ மக்களையும் பச்சிளம் குழந்தைகளையும் கொன்று அவர்களின் இரத்தத்தின் மேல் ஆட்சியமைத்த கோட்டாபய ராஜபக்சவும் மற்றும் பிள்ளையானும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் இருவரையும் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடையுங்கள்.”

இவ்வாறு சபையில் கோரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களுக்காகவும், உரிமைக்காகவும் பல உண்மைகளை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்களான சசி புண்ணியமூர்த்தி, நிலாந்தன், கிருஷ்ணா போன்றவர்கள் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தங்களது ஊடகக் கடமையைச் செய்து வருகின்றனர்.

இன்றும் அந்த ஊடகவியலாளர்கள் இந்தப் பிள்ளையான் போன்றவர்களால் அச்சுறுத்தப்பட்டு வருவதுடன் அவர்களுடைய உயிர்களுக்கு ஆபத்தும், உத்தரவாதம் இல்லாத நிலையும் காணப்படுகின்றது.

ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இந்த நிலை என்றால் எங்களுக்கும் பயமாக இருக்கின்றது. காரணம் நானும் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.

கோட்டாபய ராஜபக்சவுடன் சேர்ந்து இயங்கிய திரிபோலி ப்ரோட்டன் குழுவைப் பாவித்து எங்களையும் கொலை செய்வார்களா என்ற அச்சம் எமக்கு உண்டு.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.