யாழ். விடுதியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டோர் திருகோணமலை பெண்கள்

யாழ்ப்பாணம், திருநேல்வேலியிலுள்ள விடுதியின் அறையில் சிறுமியொருவர் சடலமாகவும், மற்றொரு பெண் உயிராபத்தான நிலையிலும் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இன்று (12) மதியம் அறைக்குள்ளிருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டு, மூதாட்டி குற்றயிராக மீட்கப்பட்டார்.

அவர்கள் தற்கொலை செய்வதாக எழுதப்பட்ட கடிதமொன்றும் அறைக்குள்ளிருந்து மீட்கப்பட்டது.

திருகோணமலை, கடற்கரையை சேர்ந்த நாகபூசணி சிவநாதன் (53) என்பவரே உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி முதல் அவர்கள் திருநெல்வேலியிலுள்ள பிறைட் இன் விடுதியில் இவர்கள் தங்கியிருந்துள்ளனர்.

12 வயதான சிறுமிக்கு மனநல பிரச்சினை உள்ளதாகவும், அதற்காக நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்ததாகவும் குறிப்பிட்டே, விடுதியில் அறையெடுத்துள்ளனர்.

மறுநாள் அந்த பெண் மாத்திரம் ஒருமுறை வெளியில் சென்று வந்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் அறையை விட்டு வெளியில் வரவில்லை.

இன்று பகல் அறையிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, விடுதி ஊழியர்கள் அறையை தட்டியுள்ளனர். பதிலில்லை. இதையடுத்து, யன்னல் பகுதியை உடைத்து உள்ளே பார்த்தபோது, கட்டிலில் இருவரும் அசைவற்று படுத்திருந்தனர். கடுமையான துர்நாற்றம் வீசியது.

இருவரும் உயிரிழந்து விட்டார்கள் என கருதிய விடுதி ஊழியர்கள் கோப்பாய் பொலிசாருக்கு அறிவித்தனர்.

கோப்பாய் பொலிசார் அறை கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். இதன்போது, சிறுமியின் உடல் இலேசாக அழுகியிருந்தது. அடுத்த கட்டிலில் படுத்திருந்த பெண்ணின் உடலில் இலேசான அசைவு தென்பட்டது.

உடனடியாக அவசர நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு, அவர் அதில் ஏற்றப்பட்டார். அப்போது, “என்னை எங்கு கொண்டு செல்கிறீர்கள்?“ என அவர் வினவினார். அதன்பின்னர் எந்தப் பேச்சுமில்லை.

அவர் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த அறையில் ஒரு தற்கொலை குறிப்பும் காணப்பட்டது.

இருவருக்கும் மனநோய் ஏற்பட்டுள்ளதால் தற்கொலை செய்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் சிறுமியின் பெயர் கேமா என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுமியுடன் வந்தவர் தாயாரா, பாட்டியா என்பதில் குழப்பம் நிலவியது. எனினும், அவர் தாயாராக இருக்கலாம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவர் இரண்டு திருமணம் செய்தவர் என்றும், உறவுச்சிக்கல்களாலும் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.