கற்பிட்டி வீதி விபத்தில் 5 வயது சிறுவன் சாவு! – இருவர் வைத்தியசாலையில்..

கற்பிட்டி – நுரைச்சோலை ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் ஐந்து வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கற்பிட்டி – தலவில பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர் என்று நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு கற்பிட்டி பகுதியிலிருந்து பாலாவியை நோக்கிப் பயணித்த மகேந்திர ரக லொறியும், எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுவனின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அவர் தனது தந்தையோடு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் உயிரிழந்த ஐந்து வயது சிறுவன் உட்பட மூவர் பயணித்துள்ளனர் என்றும் பொலிஸார் கூறினர்.

விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் உட்பட மூவரையும் சிகிச்சைக்காக அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் சேர்த்தனர்.

இதன்போது, காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.

மேலும், விபத்தில் படுகாயமடைந்த இருவரும் புத்தளம் தள வைத்தியசாலையில் இருந்து, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சாரதி, முறையற்ற வகையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்ற விதம் பற்றி வீதியோரத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.ரி.வி. கமராவிலும் பதிவாகியுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி சுனில் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.