கர்நாடக முன்னாள் பேரவைத் தலைவர் சந்திரகௌடா காலமானார்

கர்நாடக சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் டி.பி.சந்திரகௌடா (87 வயது) சிக்மகளூர் மாவட்டத்தின் தரதஹள்ளியில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

1936 ஆம் ஆண்டு பிறந்த அவர் மிக நீண்ட அரசியல் அனுபவம் உடையவர். மூன்று முறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒருமுறை சட்டமேலவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரகௌடா, அவரது சிக்மகளூர் தொகுதியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி போட்டியிடுவதற்காக 1978-ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதையடுத்து காங்கிரஸ் சார்பில் சட்டமேலவை உறுப்பினராக 1978 முதல் 1983 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இந்நிலையில் திடீரென ஜனதா தளம் கட்சியில் இணைந்த சந்திரகௌடா 1983 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை கர்நாடக சட்டப்பேரவைத் தலைவராக பதவி வகித்தார்.

பின்பு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கர்நாடக மாநிலத்தின் சட்ட அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

கர்நாடக மாநில அரசியலில் வெவ்வேறு காலகட்டங்களில் காங்கிரஸ், ஜனதா தளம், ஜனதா கட்சி, சோஷலிஸ்ட் கட்சி, கர்நாடக கிராந்தி ரங்கா, பாரதிய ஜனதா கட்சி என பல்வேறு அரசியல் கட்சிகளில் இவர் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.