வரவு – செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை 2 ஆயிரத்து 851 பில்லியன் ரூபா!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்திற்கு அமைய 2024 ஆம் ஆண்டில் அரச வருமானம் 4 ஆயிரத்து 172 பில்லியன் ரூபாவாகும். அரசின் மொத்தச் செலவீனம் 6 ஆயிரத்து 978 பில்லியன் ரூபாவாகும். இதற்கிணங்க, வரவு – செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை 2 ஆயிரத்து 851 பில்லியன் ரூபாவாகும்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட முக்கிய நிவாரணமாகும்.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு – செலவுத் திட்ட யோசனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவர் சமர்ப்பித்த இரண்டாவது வரவு – செலவுத் திட்டம் இதுவாகும்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விவாதம் நடைபெறவுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

வரவு – செலவுத் திட்டக் குழுநிலை விவாதம் அல்லது வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலான மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் டிசம்பர் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

வரவு – செலவு திட்டக் குழுநிலை விவாதம் எனப்படுகின்ற மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.