தெலங்கானா முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ரேவந்த் ரெட்டி

தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு, இன்று பதவியேற்க உள்ள நிலையில், ஐதராபாத்தில் கோலாகல விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துள்ள பாஜக ராஜஸ்தானையும் சத்தீஸ்கரையும் காங்கிரஸிடமிருந்து தட்டிப் பறித்தது. மிசோரத்தில் ஐபிஎஸ் அதிகாரி லால்துஹோமா தலைமையிலான ஜோரோம் மக்கள் இயக்கம் வெற்றிப்பெற்றது.

இந்நிலையில், தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 119 தொகுதிகளில் 64 இடங்களில் வெற்றிப்பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதனால், 10 ஆண்டுகால சந்திரசேகர ராவ்வின் ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், முதலமைச்சராக தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியில் ரேவந்த் ரெட்டி நேரில் சந்தித்து ஆசி பெற்றார். மேலும், ஐதராபாத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மைதானத்தில் இன்று நடைபெற உள்ள பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சராக பதவியேற்க உள்ள ரேவந்த் ரெட்டியை வரவேற்று நகர் முழுவதும் பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.