* இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துக * வடக்கு – கிழக்கு இணைந்த தீர்வில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை ‘நல்லிணக்கக் கொடி’யைக் காண்பித்து எம்மைத் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது! சர்வதேசத்தை நாடும் நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள்; ரணில் முன் கடும் தொனியில் சம்பந்தன்.

“வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச ஒப்பந்தமான இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அரசியல் தீர்வற்ற வெறும் ‘நல்லிணக்கக் கொடி’யைக் காண்பித்து எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முயலாதீர்கள். நாம் தொடர்ந்தும் ஏமாறத் தயாரில்லை.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் கடும் தொனியில் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (21) மாலை நடைபெற்றது. இதன்போதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன் அடிப்படையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்க்காவிடின் இந்த நாட்டுக்கு எதிராகச் சர்வதேச சமூகத்தை நாங்கள் நாடுவோம். எனவே, அந்த நிலைமைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாகப் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத் தராத உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்மொழிவை ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் சர்வதேச மேற்பார்வை மற்றும் புதிய நீதிமன்ற முறைமை உள்வாங்கப்பட வேண்டியது அவசியம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.