அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இருவர் கைது

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அயோத்தியில் ராமர் கோயில் கருவறையில் ஜன. 22-ஆம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்நிலையில், கடந்த நவம்பரில் “எக்ஸ்’ தளத்தில், “அயோத்தி ராமர் கோயில் குண்டு வைத்து தகர்க்கப்படும் எனவும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில சிறப்பு அதிரடிப் படைத் தலைவர் அமிதாப் யாஷ் ஆகியோர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் எனவும்’ பதிவு வெளியிடப்பட்டது.

இதுகுறித்து சிறப்பு அதிரடிப் படை விசாரணை மேற்கொண்டபோது இரண்டு மின்னஞ்சல்களைப் பயன்படுத்தி மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது. அந்த மின்னஞ்சல்களை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு மேற்கொண்டபோது தாஹர் சிங் என்பவர் மின்னஞ்சல்களை உருவாக்கியதும், அந்த மின்னஞ்சல்களைப் பயன்படுத்தி ஓம்பிரகாஷ் மிஸ்ரா என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

இருவரும் லக்னௌவை சேர்ந்தவர்கள். அவர்களை சிறப்பு அதிரடிப் படை புதன்கிழமை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.