விண்ணதிரக் கோஷங்களால் அதிர்ந்தது வவுனியா! – நடந்தது என்ன?

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக் கோரியும், பொலிஸாரின் அராஜகத்தைக் கண்டித்தும் வவுனியாவில் ஆர்ப்பாட்டப் பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டர்களின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட வாகனப் பேரணி வவுனியா பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமானது.

கைது செய்யப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் பேரணி வவுனியா, பழைய பஸ் நிலையத்தில் ஆரம்பித்து அங்கிருந்து மணிக்கூட்டு கோபுரச் சந்தியை அடைந்து, பசார் வீதியூடாகச் சென்று ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து அங்கு வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள தொல்பொருள் திணைக்களத்தை முற்றுகையிட்டுக் கோஷம் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரார்கள், பின்னர் கண்டி வீதி ஊடாக சென்று வவுனியா சிறைச்சாலை முன்றலில் தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.

ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டவர்கள், “பொலிஸ் அராஜகம் ஒழிக, வெடுக்குநாறி எங்கள் சொத்து, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய், வழிபாட்டு உரிமையைத் தடுக்காதே, சிவ வழிபாட்டை தடை செய்யாதே, வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம், இராணுவமே வெளியேறு, பொய் வழக்குப் போடாதே, பௌத்தமயமாக்கலை உடனே நிறுத்து” என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“மகா சிவராத்திரி வழிபாட்டைக் குழப்பி பொலிஸார் அராஜகத்தைக் கட்டவிழ்த்துக் கைது செய்யப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயப் பூசகர் உள்ளிட்ட 8 பேரும் பொய்க் குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 8 பேரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்களின் விடுதலைக்காக நாம் தெர்ர்ந்தும் போராடுவோம்.” – என்றனர்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகள், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் மதகுரு அருட்தந்தை ரமேஸ், கிறிஸ்தவ மதகுருமார், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.