புத்தளத்தில் கோர விபத்து! குடும்பப்பெண் உயிரிழப்பு!! – இரு பிள்ளைகள் உட்பட மூவர் படுகாயம்.

புத்தளம் – கொட்டுக்கச்சிய , கல்லகுளம் பகுதியில் (22) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் பலத்த காயங்களுடன் புத்தளம் தள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனமடுவ, வேம்புவெவ பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.குசுமலதா மல்காந்தி (வயது 43) எனும் மூன்று பிள்ளைகளின் தாயே விபத்தில் உயிரிழந்துள்ளார் என்றும் புத்தளம் தலைமையகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையைப் பார்ப்பதற்காக மேற்படி தாய் தனது மூன்று பிள்ளைகளுடன் வருகை தந்த பின், ஆனமடுவ வேம்புவெவ கிராமத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ஆனமடுவையில் இருந்து வந்த தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் தாயுடன் பயணித்த இரண்டு பிள்ளைகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், இந்த விபத்தின்போது வீதியில் கவிழ்ந்ததில் அந்த லொறியின் சாரதியும் படுகாயமடைந்துள்ளார் என்றும் பொலிஸார் மேலும் கூறினர்.

இதேவேளை, மோட்டார் சைக்கிளில் போதிய இட வசதி இல்லாத காரணத்தால் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த தான் புத்தளத்தில் இருந்து ஆனமடுவைக்குப் பஸ்ஸில் சென்றதாக உயிரிழந்த பெண்ணுடன் வைத்தியசாலைக்கு வந்த மற்றுமொரு மகள் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.