நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். மாலையில் வரும் மோடி, தி.நகர் பனகல் பார்க் அருகில், ரோடு ஷோ நிகழ்ச்சி வாயிலாக, பா.ஜ., வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்கிறார்.

இதில், தென்சென்னை வேட்பாளர் தமிழிசை, மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வம், வட சென்னை வேட்பாளர் பால்கனகராஜ், திருவள்ளூர் வேட்பாளர் பொன்.பாலகணபதி, ஸ்ரீபெரும்புதுார் த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், காஞ்சிபுரம் பா.ம.க., வேட்பாளர் ஜோதி வெங்கடேசன், அரக்கோணம் பா.ம.க., வேட்பாளர் பாலு பங்கேற்கின்றனர்.

சென்னையில் முதல் முறையாக நடக்கும் ரோடு ஷோ நிகழ்ச்சியில், இரண்டு லட்சம் பேரை பங்கேற்க வைக்க பா.ஜ., திட்டமிட்டு உள்ளது.

இரவு ராஜ் பவனில் மோடி தங்குகிறார். நாளை காலை அவர், வேலுாரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவு திரட்டுகிறார்.

மதியம் கோவை மேட்டுப்பாளையத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், நீலகிரி வேட்பாளர் முருகனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

அதில், கோவையில் போட்டியிடும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் வேட்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

மீண்டும் வரும் 13ம் தேதி பெரம்பலுாரிலும், 14ம் தேதி விருதுநகரிலும், 15ம் தேதி திருநெல்வேலி பொதுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.