மொட்டை கைவிட்டு.. ஜனாதிபதியுடன் இணைந்த லொஹான்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கலந்துகொண்ட கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்துள்ளேன். உங்களது அரசாங்கத்தில் அமைச்சராக உங்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை.

ஆனால் இன்று உங்களது அரசாங்கத்தில் ஒரு இராஜாங்க அமைச்சர் பதவியை வகித்து இந்த நாட்டுக்கு சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்ததையிட்டு நான் பெருமையடைகிறேன்.

இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் இந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அடித்தளமிட்டீர்கள்.

இன்றைய ஜனாதிபதி வேட்பாளர்கள் நிறைந்து வழிகின்றனர். வாயால் வடை சுடும் இவர்கள் , இந்த நாட்டில் ஒரு பாலத்தைக் கூட கட்டாதவர்கள்.

எனவே, இந்த நாட்டை மீண்டும் பொறுப்பேற்குமாறு கௌரவ ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றோம். தனிப்பட்ட முறையில் எனது முழு ஆதரவையும் உங்களுக்கு வழங்குவேன் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் லொஹான் ரத்வத்த .

Leave A Reply

Your email address will not be published.