முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல்: கைதான நால்வருக்கும் விளக்கமறியல்! (Photos & Video)

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைதான பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட நால்வரையும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச் சட்டத்தின் கீழ் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பூர் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் (12) இரவு கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்று (13) மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் மேற்படி சட்டத்தின் கீழ் முற்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் தஸ்னீம் பௌசான் உத்தரவிட்டுள்ளார்.

சமூகச் செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40), அவரின் மகளான கிழக்குப் பல்கலைக்கழக மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22), சமூகச் செயற்பாட்டாளர் செல்வவினோத்குமார் சுஜானி (வயது 40), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (வயது 43) ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளை நினைவுகூரும் வகையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தபோது சம்பூர் பொலிஸாரால் நீதிமன்றத் தடை உத்தரவு வழங்கப்பட்டது.

அந்தத் தடை உத்தரவை வாங்காமல் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுத்த குற்றத்துக்காகவே மேற்படி நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.