விஜயதாஸவுக்குப் பொறி வைக்கத் தயாராகின்றது மொட்டுக் கட்சி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துள்ள நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.

மொட்டுக் கட்சியின் அரசியல் குழு நேற்று கூடியது. இதன்போது கட்சியின் ஒழுக்காற்று விசாரணைக் குழு முன்வைத்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“அரசியல் குழுக் கூட்டத்தில் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்குத் தேசிய ஏற்பாட்டாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு, தற்போது மற்றுமொரு கட்சியில் இணைந்துள்ள விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஒழுக்காற்று விசாரணைக் குழு அனுமதி கோரி இருந்தது. அதற்குரிய அனுமதியும் வழங்கப்பட்டது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.