மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு, புதிய அமைச்சரவையை ஆசிர்வதிப்பதற்காக அழைக்கப்படும் திருநங்கைகள் !

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு, புதிய அமைச்சரவையை ஆசிர்வதிப்பதற்காக சுமார் 50 திருநங்கைகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

பாஜக எம்.பி.யும் முன்னாள் சமூகநீதி அமைச்சரான வீரேந்திர குமார் தனது இல்லத்திற்கு, திருநங்கைககளை அழைப்பு விடுத்திருந்தார்.

பதவியேற்பு விழாவிற்கு திருநங்கைகள் சமூகத்தினர் அழைக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும், உ.பி.யைச் சேர்ந்த சோனம் கின்னர் தலைமையில் 50 திருநங்கைகள் புதிய அமைச்சரவையை ஆசி வழங்குவதற்காக வந்துள்ளனர் என்றும் வீரேந்திர குமார் கூறினார்.

சோனம் கின்னர் கூறியதாவது, “பிரதமர் மோடி எதிர்பார்த்த வெற்றியினைப் பெறவில்லையெனினும், எங்கள் பிரதமர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமராக தொடா்ந்து 3-ஆவது முறையாக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பதவியேற்கவுள்ளாா். அவருடன் புதிய அமைச்சா்களும் பதவியேற்கவுள்ளனா். தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் இரவு 7.15 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறவிருக்கிறது. நாட்டில் தொடா்ந்து மூன்றுமுறை பிரதமரான முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் சாதனையை மோடி தற்போது ‘சமன்’ செய்யவிருக்கிறாா்.

அண்மையில் நடைபெற்ற 18-ஆவது மக்களவைத் தோ்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. 240 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியமைக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.