மட்டக்களப்பு பேதனா வைத்தியசாலையில் மூடப்பட்டதாக வந்த செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை.

மட்டக்களப்பு பேதனா வைத்தியசாலையில் கடமைபுரிந்து வந்த தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு கம்பஹா மாவட்டத்தில் வைத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் கடமைபுரிந்த வைத்தியசாலை பிரிவு மூடப்பட்டதாக ஊடகங்களில் வந்த செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம் ஊடகங்களுக்குக் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் நேற்றையதினம் (13) குறித்த தாதியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரினால் இவ்வைத்தியசாலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வைத்தியசாலை கொவிட் செயலணிக் குழுமம், தேசிய தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவின் நிபுணர்களுடன் ஆலோசித்தபோது நோய்த் தொற்றுக்கான ஆபத்து மதிப்பீடு சாத்தியம் மிகக்குறைவாக இருந்த போதிலும் மக்கள் நலன்கருதி குறித் தாதிய உத்தியோகத்தர் கடமைபுரிந்த பிரிவில் பணியாற்றும், பணியாற்றச் செல்லும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து இவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லையென உத்தியோக பூர்வ பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. மேலும் எந்தஒரு வைத்தியசாலை உத்தியோகத்தரும் தனிமைப்படுத்தப்படவுமில்லை எனவும், மக்கள் வதந்திகளை நம்பி அச்சங்கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அனைத்து வைத்திய சேவைகளும் எவ்வித இடையூறுமின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், பொதுமக்கள் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களைப் தொடர்ச்சியாகப் பின்பற்றி நடப்பதுடன் நோயாளர்களைப் பார்வையிட வைத்தியசாலைக்கு வருபவர்கள் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், அத்தியாவசிய மருத்துவத் தேவைகளுக்கு தமது வதிவிடத்திற்கு அண்மையிலுள்ள வைத்தியசாலைகளை நாடுமாறும் கேட்டுக் கொண்டார்.

இதுதவிர மட்டக்களப்பு போதனா வைத்திசாலை தொடர்பாக தகவல்கள் பணிப்பாளரான என்னால் வெளியிடப்படாமல் வேறு நபர்களாலோ அல்லது ஊடகங்களாலோ அல்லது வேறு வழிகளினாலோ வெளியிடப்பட்ட செய்திகளுக்கு வைத்தியசாலைப் பணிப்பாளர் பொறுப்புக்கூறமுடியாது என அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.