11. இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும் : வெற்றிச் செல்வன்

பகுதி 11

சில சம்பவங்கள் முன்பின் இருந்தாலும் சில முக்கிய விடயங்களையும் இதில் குறிப்பிட வேண்டியுள்ளது. உமா மகேஸ்வரனும், இரா ஜனார்த்தனம் உம் நேருக்கு நேர் சந்தித்தால் ஜனார்த்தனம் தலையை குனிந்து கொண்டு ஒதுங்கி போவதும், உமாமகேஸ்வரன் எங்களிடம் கள்ளன் போகிறான் என சத்தமாக சொல்லுவதும் வாடிக்கை. என்னைப் பொறுத்தளவில் ஜனார்த்தனம் ஒரு பெரிய ஆள் என நினைத்திருந்தேன். மாறன் ஏன் உமா கோபப்படுகிறார் என்ற விளக்கத்தைக் கூறினார்.

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும் – வெற்றிச் செல்வன்

திரு அமிர்தலிங்கம் ஜெயவர்தன இடம் அரசியல் சமரசம் செய்து மாவட்ட சபையை பெற்றது.

பின்பு கோப்பாய் எம்பி கதிரவேற்பிள்ளை அவர்களுக்கும் அமிர்தலிங்கம் அவர்களுக்கும் கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கதிரவேற்பிள்ளை திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் மற்றும் அமெரிக்க, இலங்கை ரகசிய தொடர்புகள் சம்பந்தமான தமிழர் விடுதலைக் கூட்டணியால் தயாரிக்கப்பட்ட  ரகசிய கோப்புகளை எடுத்துக்கொண்டு இந்தியா வந்து டெல்லியில் இந்திய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் இடம் கொடுக்கப் போவதாக கூறி 1981 மார்ச் மாதம்என நினைக்கிறேன்.

இங்கு சென்னை வந்து அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அமிர்தலிங்கம் ஜனார்த்தனன் மூலம் தமிழ் கதிரவேற்பிள்ளை உடலை இலங்கை அனுப்புவதோடு அவரது உடமைகள் எல்லாம் மிக கவனமாக உடலோடு அனுப்பி வைக்கும்படியும் கூறுகிறார்.

தமிழ்நாட்டில் பெரியார் திடலில் அவரது கதிர்வேல் பிள்ளையின் உடலை வைத்து அஞ்சலி செலுத்த ஏற்பாடு நடைபெற்றதாகவும் ஜனார்த்தனம் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதற்கு பல இடைஞ்சல்கள் செய்ததாகவும் கூறப்படுகிறது.  இதனால்தான் உமா மகேஸ்வரன் ஜனார்த்தனன் மேல் கடுங்கோபத்தில் இருந்த சம்பவத்துக்கு காரணத்தை விளக்கினார்.

எமது பழைய எம்எல்ஏ ஹாஸ்டல் அலுவலகத்துக்கு லங்கா ராணி அருளர் அடிக்கடி வந்துபேசுவார். இவர்கள் உமா இடம்பேசும்போது நான் மாதவன் அண்ணா சந்ததியர் போன்றோர்களும் இருப்போம். அருளர் விடுதலைப்புலிகளுக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கும் உள்ள சில பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பேச நடு நிலையாக வந்து இருந்தார்.

முக்கியமான பிரச்சனை என்னவென்றால் அந்த காலகட்டத்தில் சுந்தரம் புலி படைப்பிரிவு. காத்தான் புலி படைப்பிரிவு என்ற பெயர்களில் எமது சிறுசிறு தாக்குதல்களை மேற்கூறிய பெயர்களில் உரிமை கொண்டாடி வந்தோம் இது பிரபாகரனுக்கு பெரும் தலையிடியை கொடுத்தது வந்தது போல. வேறு பல பிரச்சினைகளை சந்ததியாரும் , உமா மகேஸ்வரனும் அருளர் இடம் விவாதித்துகொண்டிருப்பார்கள்.

இந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட ஒரு மாதம் நடந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் இனிமேல் நாங்கள் விடுதலை புலி என்ற பெயரை பாவிப்பதில்லை என்று உறுதிமொழி கொடுத்தார்கள்

சந்ததியாரும் உமா மகேஸ்வரனும்  எமது இடத்துக்கு ஈரோஸ் ஐயர் பாலாவும் அடிக்கடி வந்து போவார். நாகராஜா. ஐயர் எல்லோரும் வருவார்கள் பழைய கதைகளை கூறுவார்கள்.

நாகராஜா ஆரம்பகாலத்தில் படுக்கையில் வைத்து சக நண்பர்களை பிரபாகரன்சுட்ட கதைகள் எல்லாம்கூறுவார். PLO வில் பயிற்சி எடுத்த விடுதலைப்புலி ஆரம்பகால உறுப்பினர் விச்சு என்ற விஸ்வேஸ்வரன் அடிக்கடி வருவார் அவர் உமா மகேஸ்வரனும் சிறுசிறு பயணங்களை மேற்கொண்டு வெளியூர்களுக்கும் போய் வருவார்கள்.

அதே மாதிரி நாக ராஜா உடன் உமா பயணங்கள் போய் வருவார். அதோடு நாகராசா விடம்பணம் கடன் வாங்குவதும் உண்டு. எமதுஅறைக்கு நாகராஜா வந்தால், எமக்குசந்தோசம் காரணம் பகலுணவு மீன் இறைச்சி எல்லாம் வாங்கித் தருவார்.இப்படியான நேரங்களில் தான் நாங்கள் நல்ல உணவு சாப்பிட முடியும் இல்லாவிட்டால் அந்த10 ரூபாதான்.

விடுதலைப் புலிகள் அமைப்பை விட்டு விலகி உமா மகேஸ்வரன் சென்னையில் தங்கியிருந்து கஷ்டப்பட்ட போது ஐநாவில் வேலை செய்த காந்தளகம் சச்சிதானந்தம் ஐயா உமா மகேஸ்வரனுக்கு வருமானம் கிடைக்க காந்தளகம் புத்தகங்களை விற்பதற்கு உதவி செய்தார்.

சென்னையில் இருந்த தன்னோடு படித்த பச்சையப்பா கல்லூரி பேராசிரியருமான பிரித்திவிராஜ் என்பவரின் செனாய் நகர்வீட்டில் காந்தளகம் புத்தகங்கள் இருந்தன.

 

 

பேராசிரியர் பிரித்திவிராஜ் அமைந்தகரையில் தனது தோட்ட வீட்டில் உமாமகேஸ்வரன் மறைந்து வாழ உதவி செய்துள்ளார் .மிக ரகசியமான இடம். அமைந்தகரையில் கிளினிக் வைத்திருந்த பேராசிரியர் மூ வரதராஜனின் மகன்தான் உமா மகேஸ்வரனுக்கு இலவச வைத்தியம் செய்பவர். பிற்காலத்தில் நாங்களும் போய் இலவசமாய் மருந்து எடுத்து இருக்கிறோம் அவரின் பெயர் மறந்து விட்டேன்.

ஜூலை கலவரம் நடந்து கொஞ்ச நாட்களில் இலங்கையிலிருந்து காந்தளகம் சச்சிதானந்த ஐயா கலவர நேரம் பாதிக்கப்பட்டு சென்னை ப்ளு டைமன்ட் ஓட்டலில் வந்து தங்கியிருந்தார் அங்குதான் தந்தை செல்வாவின் மகன்சந்திரகாசன் நும் தங்கியிருந்தார்.

காந்தளகம் சச்சிதானந்தம் தனது அறையில் பிரஸ் மீட்டிங் ஏற்பாடு செய்திருந்த போது உமா மகேஸ்வரன் அதற்கு அழைத்தார். உமாவின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு அது. கூட என்னையும் அழைத்துப் போய் இருந்தார். பிரஸ்மீட் முடிவில் சச்சிதானந்தம் , உமா இடம் கூறிய ஒரு செய்தியை உமா பத்திரிகையாளர்களிடம் கூறச் சொல்லி அதாவது மொரிசியஸ் அரசாங்கம் ஈழப் பிரச்சினையில் தமிழருக்கு ஆதரவாக இருப்பதான செய்தி.

இந்த செய்தி அடுத்த நாள் பத்திரிகையில் சச்சிதானந்தம் ஐயா, உமாமகேஸ்வரன் பேட்டி களோடு, எனது பேட்டியும் வந்திருந்தது. எனது போய்ட்டு இருக்கு விடுதலைப்புலி வெற்றிச்செல்வன் கூறுகிறார் என்று இருந்தது.

அடுத்த நாள் காலையில் பத்திரிகையை வாசித்த சந்ததியார் என்னை அழைத்து கடுமையாக ஏசினார் முதலாவது நான் பேட்டிகொடுத்தது தவறு என்றும், அதைவிடத் தவறு விடுதலைப்புலி வெற்றிச்செல்வன் என்று கூறியது என்றும் திட்டினார்.

நல்ல காலம் அந்த நேரம் உமா மகேஸ்வரன் அங்கு வந்து தான்தான் பேட்டி கொடுக்க சொன்னதாகவும், இங்கு உள்ள பத்திரிகைகள் இலங்கை போராளிகள் பற்றி எழுதும்போது எந்த இயக்கமாக இருந்தாலும் விடுதலைப் புலிகள்தான் என்று எழுதுகிறார்கள். இதில் வெற்றியின் தவறு ஒன்றும் இல்லை என்று கூறினார்.

ஆனாலும் சந்ததியார் கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்ற கதை போல், உமாவையும் இடித்துரைப்பது போல், பேட்டி கொடுக்கும் முன்பு விடுதலைப்புலிகளுக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்ற இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை முதலில் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும் என்று கூறினார். உமாவும் சிரித்துக்கொண்டு நீங்களே இந்த முயற்சியை எடுக்கலாம் தானே என்று கூறினார்.

இலங்கையிலிருந்து பெருமளவு இளைஞர்கள் சிறுவர்கள் இந்தியாவில் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார்கள். இங்கு வந்த பெரும்பான்மையானவர்கள் 3 மாத பயிற்சி ,திரும்பும்போது ஆயுதத்தோடு போவோம்என்ற நம்பிக்கையில்தான் வந்தவர்கள். சில பேர் இங்கு சினிமா நடிகர் நடிகைகளை பார்க்கலாம் என்ற கனவில் வந்தவர்களும் இருந்தார்கள்.

டெலோ இயக்கம் உமா மகேஸ்வரன் இயக்கத்துக்கு என்று ஏமாற்றி ஆள் சேர்த்த கதையும் உண்டு. வந்தவர்கள் ஸ்ரீ சபா ரத்னத்தைபார்த்து இவரா உமாமகேஸ்வரன் என்று கேட்டு தாங்கள் பார்த்த படத்துக்கும் நேரில் பார்ப்பதற்கும்வித்தியாசமாக இருக்கிறார் என்று கூறியும்இருக்கிறார்கள்.

இன்னொரு மிக முக்கிய சம்பவத்தையும் கூறவேண்டும் இயக்கத் தலைமைகள் எல்லாம் மறைத்த சம்பவம். பங்களாதேஷ் அகதிகள் இந்தியாவுக்கு கூடுதலாக வந்து இந்தியா நேரடியாக பங்களாதேசில் தலையிட்டு பிரித்து கொடுத்தது போல், இங்கும் இலங்கை அகதிகள் பெருமளவு வந்தாள் இயக்கங்களுக்கு பெருமளவு பயிற்சியும் ஆயுதமும் கிடைக்கும் என்ற கனவில் எல்லா இயக்கங்களும் பெருமளவு பொதுமக்களை மூன்று மாதத்தில் திரும்பி வந்து விடலாம்  என அழைத்து வந்தார்கள்.

அகதிகள் கூடினால் இந்தியா தலையிடும் தமிழீழம் கிடைத்து விடும் என்று கூறி பொதுமக்களை தங்கள் தங்கள் இயக்க படகுகள் மூலம் வேறு  கூட்டி வந்தார்கள். அதோடு இதை பணம் சேகரிப்பதற்கான வழியாகவும் கையாண்டார்கள் பணம் வாங்கிக்கொண்டு இயக்க, வெளி படகுகளில் அப்பாவி இலங்கைத் தமிழர்களை இந்தியா கொண்டு வந்து சேர்த்து இருபது முப்பது வருடங்கள் அவர்களின் வாழ்க்கையை சீரழித்து அதில் இந்த விடுதலை இயக்கங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடரும்……


அனைத்து பதிவுகளையும் படிக்க இங்கே அழுத்தவும்

Leave A Reply

Your email address will not be published.