12. இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும் : வெற்றிச் செல்வன்

பகுதி 12

நான் இருந்த சென்னை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. நடந்த சம்பவங்கள் மாதங்கள் நினைவில் இல்லை. உமாமகேஸ்வரன் எம்ஜிஆரை சந்திக்கப் போகும்போது ஒருமுறை அவரிடம் என்னையும் அழைத்து போகும்படி உரிமையோடு கேட்டேன்.

காரணம் நான் சிறு வயதில் இருந்து எம்ஜிஆர் ரசிகர். இன்று வரையும்தான். எம்ஜிஆரை பொதுக்கூட்டங்களில் பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறேன். பக்கத்திலிருந்து பேச ஆசை. உமாவுடன் எம்ஜிஆரை பார்க்க ராமாவரம் தோட்டத்துக்கு போன போது பக்கத்தில் எம்ஜிஆரை பார்த்தேன். அவர் உமாவை கூட்டிக்கொண்டு தனி அறைக்கு போய் விட்டார்.

உமாவோடு நல்ல தொடர்பில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா பாராளுமன்ற
உறுப்பினர் திரு எம் கல்யாணசுந்தரம் அவர்கள் உமாவை தான் டில்லி போகப் போவதாகவும் தன்னுடன் டெல்லிவந்தால் ஜி பார்த்தசாரதி அவர்களைசந்தித்து பேச ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.

ஆனால் இங்கு பயிற்சிகள் முகாம்கள் போன்ற பல வேலைகள் இருந்தபடியால் உமா மகேஸ்வரன்தயங்கினார். ஆனாலும் இந்த சந்தர்ப்பத்தை இழக்கவிரும்பவில்லை. தனது டெல்லி வரமுடியாத நிலையை கூறி வேறு யாரையாவது அனுப்பி விடவா என்று கேட்டார். அவரும் சரி என்று சொல்லி விட்டார் .

உமாவும், சந்ததியார் உடன் கதைத்து, டெல்லி அனுப்ப என்னை முடிவு செய்தார்கள். சந்ததியாரும் வெற்றியும்முன்பு திமுக எம்பி குழுவுடன் டெல்லி போய் போய் வந்த அனுபவம் இருக்கும் என கூறினார்.இவர்களின் இந்த முடிவு எனது வாழ்க்கையையே மாற்றிவிட்டது.

நானும், திரு கல்யாண சுந்தரம் எம் பியுடன் டெல்லி போய் எம்பி களுக்கான அவரதுவீட்டில் தங்கினேன். அடுத்த நாள் ஜி பார்த்தசாரதியை போய் சந்தித்தோம். அப்பொழுது ஜி பார்த்தசாரதி இந்திய நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை வகுப்பு குழுவின் தலைவராக இருந்தார். இந்திரா காந்திக்கு மிக நெருக்கமானவர். ஜூலை மாத கலவரத்தின்போதுஇலங்கைக்கு ஜி பார்த்தசாரதியை தான் இந்திராகாந்தி அனுப்பினார்.

அடுத்து வந்த ராஜீவ் காந்தி காலத்தில் ஜி.பார்த்தசாரதியை இலங்கைபேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள ஜேஆர் அனுமதிக்கவில்லை இதை ராஜீவ் காந்தியும் ஏற்றுக்கொண்டார். இலங்கை பிரச்சினை தடம்புரண்டது க்கு இதுவும் ஒரு காரணம்.

என்னை ஜி பார்த்தசாரதி இடம் அறிமுகப்படுத்திவிட்டு கல்யாணசுந்தரம் எம்பி தனது வேலையை பார்க்க போய் விட்டார். பார்த்தசாரதி அவர்கள் முதலில் எனது தனிப்பட்ட வாழ்க்கை முறை குடும்ப உறவுகள் படிப்பு போன்றவற்றை முதலில் விசாரித்தார். பின்பு உமா மகேஸ்வரன் பிளாட் மற்ற இயக்கங்கள் பற்றி எல்லா மேலோட்டமாக என்னுடன் கேட்டார்.

அவர் என்னை ஒரு சிறுவனாகவே பார்த்தார். அப்பொழுது எனது வயது24. உமா மகேஸ்வரன் டெல்லி வரும்போது முடிந்தால் தன்னை வந்து சந்திக்கும்படி கூறினார். ஜிபி செயலாளர் அய்யாசாமி அவர்கள் மிக நன்றாக பேசி, தேநீர்எல்லாம் கொடுத்து உபசரித்தார். அந்த நேரத்தில் இந்தியாவின் உச்சகட்ட செல்வாக்கில் இருந்த ஜி பார்த்தசாரதி அவர்கள் சந்தித்தது எனக்கு ஒரு கனவு போலவே இருந்தது. அவர் எனக்கு விடை கொடுத்தபோது ,உமாவை டெல்லிவரும்போது இந்து பத்திரிகையின் டெல்லி எடிட்டர் ஜிகே ரெட்டி ஐயும் சந்திக்கச் சொன்னார்.

நான் திரும்ப வரும்போது நோர்த் அவன்யு வந்து எல் கணேசன் எம்பி விடுதிக்கும் போய் அங்கிருந்த எம்பியின் உறவுக்கார நண்பரும் முன்பு போனபோது உதவி செய்த வருமான ,பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சித்தார்த்தனை சந்தித்தேன். இனிமேல் டெல்லி வந்தாள் இங்கு தான் தங்க வேண்டும் என்று உரிமையுடன்கூறினார்.

நான் திரு, கல்யாணசுந்தரம்அவர்களின் வீட்டுக்கு திரும்பும்போது வழியில் ,இருந்த இந்து
அலுவலகத்துக்கும் போய் இந்து பத்திரிகை டெல்லி ஆசிரியர் ஜிகே ரெட்டி அவர்களை பார்த்தேன் . மிக அருமையான மனிதர்.

இவரும்இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை வகுப்புக் குழுவில் ஒருவர். பல புத்திமதி களைகூறினார். நானும் நன்றி கூறி விடை பெற்றேன். திரு கல்யாண சுந்தரம் அவர்களின் உதவிக்கு நன்றி கூறி அவர் புக் பண்ணி தந்த ரயில் டிக்கெட்டில் அன்றே சென்னை திரும்பினேன்.

சென்னை பரபரப்பாக இயங்கிக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் எமது இயக்கம் எல்லா இயக்கங்களையும் விட சிறந்த முறையில் இயங்க தொடங்கி இருந்தது உண்மை. மாறன் இந்திய உளவு பயிற்சிக்கு அனுப்பப்பட்டதாக அறிந்தேன்.

மாறன் மிகச் சிறந்த போராளி.தமிழ்நாட்டில் ரகசியமாக இருந்த காலகட்டத்திலும் அதன் பிறகும் மாறன் மிககடுமையாக உழைத்தார். தோழர்களை சந்திப்பது அவர்களுக்கு தேவையான பணம், பொருட்களை உடனுக்குடன் கொடுப்பது பலநாட்கள் தூக்கம் இல்லாமல் ஓடியதை நான் பார்த்திருக்கிறேன்.

அவருக்கு உதவியாக இதே மாதிரி கந்தசாமியும் அவருக்கு உதவியாக இருந்தார். மாறன், கந்தசாமி எல்லாம். கிளிநொச்சி வங்கிக் கொள்ளை,ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத் தாக்குதல் போன்றவற்றில் ஈடு பட்ட மூத்த தோழர்கள். மாறனின் அண்ணா ஒரு இஞ்சினியர் அவரும் ஆரம்பகாலத்தில் விடுதலைக்கு உதவிய ர்களில் ஒருவர் என கேள்விப்பட்டேன்.. மாறன் புதிய உளவுபயிற்சியை முடித்துக் கொண்டு 83 ஆம் ஆண்டு கடைசியில் இலங்கை போய் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு பூசா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

87 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்பு விடுதலை செய்யப்பட்டார்.89 ஆண்டு உமா பிளாட்தோழர்களுக்கு எதிராக இருந்த போது தோழர்களுக்காக மிகக் கடுமையாக உமா இடம் வாதாடிய தாக கேள்விப்பட்டேன். பின்பு வவுனியா அரச போக்குவரத்து சபை மேலாளராக இருந்த போது சக நெருங்கிய தோழர் மாணிக்கம் தாசன் நெருக்குதல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் கொலை செய்யப்பட்டு தற்கொலையா கட்டப்பட்டதாக உள்ளிருந்து செய்திகள் வந்தன இதைப்பற்றி பின்பு விரிவாக எழுதுவேன். மாறனின் உண்மையான பெயர் தேவதாசன்.
ஜெர்மனி எமது அமைப்பாளர் பரமதேவா ஜெர்மனியிலிருந்து பல தோழர்களை இந்தியாவுக்கு அந்த காலகட்டத்தில் அனுப்பியிருந்தார்.

அதில் ஒருவர் எனது நெருங்கிய நண்பராக இருந்த நந்தகுமார் இவர் ரேடியோ சிலோன் -மயில்வாகனன் தாரின் தங்கை மகன் . இந்திய பயிற்சியை முடித்துக் கொண்டு சில தோழர்கள் ஓடும் ஆயுதங்களோடும் படகில் மட்டக்களப்பு போகும்போது விமான குண்டு வீச்சில் படகில்வைத்தே கொல்லப்பட்டார்கள் .

பரமதேவா ஒன்றுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜெர்மன் கிளை பொறுப்பாளர் .பின்பு பிளாட் இயக்கத்துக்காக வேலை செய்தவர். மட்டக்களப்பு சிறையை உடைத்து எமது தோழர்களும் மற்றைய இயக்கத் தோழர்களும் தப்பி விட்டதாக செய்திகள் வந்தன. எல்லோருக்கும் மகிழ்ச்சி. அடுத்த நாள் தமிழ்நாட்டு கரையோரம் வந்துவிடுவார்கள் என செய்திகள் வந்தன.

இதே நேரம் ஈபிஆர்எல்எஃப் தோழர்கள் தாங்கள் தான் மட்டக்களப்பு சிறையை உடைத்து என பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்கள். நாங்கள் இரவோடு இரவாக மட்டக்களப்பு சிறை உடைப்பு பற்றி போஸ்டர் அடித்து எங்கள் இயக்கம் உரிமை கோரி பெரிய பெரிய போஸ்டர்களாக இரவு சென்னையில் நானும், சட்டக்கல்லூரி மாணவர் தமிழ்மணி, இன்னும் இரண்டு தோழர்கள் அவர்களின் பெயர் தெரியவில்லை மறந்துவிட்டேன்.

விடிய விடிய போஸ்டர்ஒட்டினோம்.அப்போது சென்னையில் விடிய விடிய தெருவில் மக்கள் நடமாட்டம் ஆகத்தான் இருக்கும் காரணம் தண்ணீர் கஷ்டம் குடங்களோடுபெண்கள் ஆண்கள் சிறுவர்கள் எல்லோரும் தண்ணீர் லாரி க்காக காத்திருப்பார்கள். அவர்கள் போஸ்டர் வாசித்து விட்டு விபரங்கள் கேட்டு அறிந்து, எங்களை வாழ்த்தி திறந்து இருக்கும்டீக்கடைகளில் எங்களுக்கு நடு இரவு சாமத்தில் டீ எல்லாம் வாங்கித் தந்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள். மறக்க முடியாத நாட்கள்.

இவற்றைபதிவு செய்த போது சரியான தேதி மாதங்களை குறிப்பிட முடியாது உள்ளது நினைவில் இல்லை பிற்காலத்தில்இப்படி எழுத வேண்டி வரும் என அந்த காலத்தில் நினைக்கவில்லை.  இப்போதுகூட பல சம்பவங்கள் நினைவில் இல்லை.  நினைவில்  வரும்போது அந்த சம்பவங்களையும் பதிவில் இட யோசித்துள்ளேன்.

தொடரும்…..


அனைத்து பதிவுகளையும் படிக்க இங்கே அழுத்தவும்

Leave A Reply

Your email address will not be published.