உளுக்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்ற இளைஞரே இரத்தக்கறைக் காயங்களுடன் சடலமாக மீட்பு – உறவினர்கள் வாக்குமூலம்.

வவுனியா, உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யச் சென்ற இளைஞரே இரத்தக்கறைக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை இளைஞர் ஒருவரின் சடலம் இரத்தக்கறைக் காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தது.

சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த புதுவருட தினமன்று காணாமல்போயிருந்த வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிதாசன் (வயது 33) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டிருந்தது.

மேற்படி இளைஞர் புதுவருட தினத்தன்று (திங்கட்கிழமை) காலை வீட்டில் இருந்து சென்றார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின் காலையில் சூடுவெந்தபுலவு வீதியில் நின்றார் எனவும், தமது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, மரணமடைந்த இளைஞர், “என்னைச் சிலர் தாக்குகின்றனர். இது தொடர்பில் உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப் போகின்றேன். எனவே, பொலிஸ் நிலையத்தில என்னை இறக்கி விடுங்கள்:” – என்று கோரியுள்ளார் எனவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து மேற்படி இளைஞர் உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் இறக்கி விடப்பட்டார் எனவும், அவர் பொலிஸ் நிலையத்துக்குள் சென்றார் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்பின் அவரைத் தேடியும் கிடைக்காத நிலையில் இரண்டு தினங்களின் பின் கடந்த புதன்கிழமையே அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்றும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் உறவினர்கள் தமது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.