கோவாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி!

கோவாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவா மாநிலம் ஷிர்காவ் கிராமத்தில் உள்ள லைராய் தேவி கோயிலில் புகழ்பெற்ற ‘ஜாத்ரா’ என்று கூறப்படும் திருவிழா நேற்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. வழக்கம்போல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த டிரோன்களும் பயன்படுத்தப்பட்டன.
எனினும் நேற்று நள்ளிரவு பக்தர்கள் ஒரு சரிவான பாதையில் வந்துகொண்டிருந்தபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் கோவா மாவட்ட மருத்துவமனை மற்றும் கோவா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இதுதொடர்பாக தன்னுடன் பேசியதாகவும் மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என்று கூறியதாகவும் முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியும் தனது எக்ஸ் பக்கத்தில், ஷிர்காவ் கோயில் கூட்ட நெரிசலில் பக்தர்கள் உயிரிழந்தது கவலை அளிப்பதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.