யாழில் சுமுகமான வாக்களிப்பு.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சுமுகமாக நடைபெற்றது.
யாழ். மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் 17 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
குறித்த இந்தச் சபைகளில் உள்ள 243 வட்டாரங்களில் இருந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 3 ஆயிரத்து 519 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களில் இருந்து போட்டியிட்டனர்.
மக்கள் தமது வாக்குகளை அளிப்பதற்காக 517 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்தத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட சென். ஜேம்ஸ் பாடசாலையிலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குடத்தனை பாடசாலையிலும், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட அத்தியடி கணபதி கலாசார மண்டபத்திலும் தமது வாக்குகளைச் செலுத்தச் சென்றமையைப் படங்களில் காணலாம்.