நம்பிக்கையைச் சீர்குலைத்த டிரைவர்: முதலாளி பணத்தை செலவழித்து கோயில் உண்டியலில் போட்ட வினோதம்

முதலாளி கொடுத்த ரூ.1.51 கோடியை எடுத்துக் கொண்டு மாயமான கார் டிரைவர் அந்த பணத்தை தனது செலவுக்கும், கோயில் உண்டியலிலும் போட்டுள்ளார்.

பெங்களூரூவைச் சேர்ந்த ஆடிட்டர் ஒருவரிடம் ராஜேஷ் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இதனால் ராஜேஷ் மீது முதலாளிக்கு நம்பிக்கை உண்டு.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக ராஜேஷிடம் பேக் ஒன்றை கொடுத்து அதனை தனது காரில் வைக்கும்படியும், அதில் பணம் இருப்பதாகவும் கூறி ஆடிட்டர் கொடுத்தார். பின்னர், வங்கிக்கு செல்வதற்காக ஆடிட்டர் வீட்டை விட்டு வெளியில் வந்தபோது ராஜேஷையும், காரையும் காணவில்லை.

பின்னர் ராஜேஷுக்கு போன் செய்த போது மருந்து வாங்க வந்திருக்கிறேன், 10 நிமிடத்தில் வந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார். ஆனால், ராஜேஷ் வராததால் ஆடிட்டர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ராஜேஷ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பொலிஸார் அவரை ஆஜராகும்படி கூறினர்.

பின்னர், பணத்தை எடுத்து கொண்டதை ஒப்புக்கொண்ட ராஜேஷ், ஒரு லட்ச ரூபாய்க்கு தனது குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கியதாகவும், மீதியுள்ள பணத்தை கோயில் உண்டியலில் போட்டு விட்டதாகவும் தெரிவித்தார். பின்னர் ராஜேஷை பொலிஸார் கைது செய்தனர்.

ஆனால், கோயில் உண்டியலில் போட்ட பணத்தை திரும்ப பெற முடியாது என்பதால் பொலிஸார் செய்வதறியாது உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.