பாகிஸ்தான் வான்வழியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிப்பு!

பாகிஸ்தான் வான்வழியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலினால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நிலவியது. அப்போது, இருநாடுகளும் தங்களது வான்வழிப் பாதைகளை மூடின.

இந்தியா மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளினால், கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் மீது இந்திய விமானங்கள் பறந்து செல்லத் தடை விதித்து அதற்கான வான்வழிப் பாதைகளை அந்நாட்டு அரசு மூடி உத்தரவிட்டது.

இந்நிலையில், அந்தத் தடையானது இன்று (மே 23) முடிவடைந்த நிலையில், அதனை ஜூன் 23 வரை நீட்டித்து பாகிஸ்தான் விமான நிலைய அதிகாரம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் வானில் இந்திய விமானங்கள் பறப்பதற்கானத் தடையானது வரும் ஜூன் 24 அன்று காலை 4.59 மணி வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தடையானது இந்திய ராணுவத்தின் விமானங்களுக்கும் பொருந்தும் எனவும் இந்திய விமான நிறுவனங்களினால் இயக்கப்படும் எந்தவொரு விமானங்களும் பாகிஸ்தான் வான்வழிப் பாதையை பயன்படுத்த அனுமதி கிடையாது எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தடையானது, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து சட்டங்களுக்கு உட்பட்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட, இயக்கப்பட்ட , உரிமையாக்கப்பட்ட விமானங்களுக்கும் இந்தத் தடை உத்தரவுப் பெருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மே 21 ஆம் தேதியன்று, தில்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு இயக்கப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி மழையில் சிக்கி சேதமடைந்தது.

அப்போது, அவசரமாக விமானத்தைக் கட்டுப்படுத்த அந்த விமானி பாகிஸ்தான் வான்வழிப் பாதையை பயன்படுத்த கோரிய அனுமதியை அந்நாட்டு விமானக் கட்டுப்பாட்டு அறை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.