ஆர்சிபி வெற்றிப் பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் 7 பேர் பலி!
ஆர்சிபி வெற்றிப் பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் 7 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளதால், கர்நாடக முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் ஆகியோர் தலைமையில் சின்னசாமி திடலில் பாராட்டு விழா நடைபெறுகிறது. கர்நாடக பேரவையிலிருந்து தொடங்கும் வெற்றிப் பேரணி சின்னசாமி திடல் வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆர்சிபி அணியின் ரசிகர்கள் பலர் சின்னசாமி திடலில் அத்துமீறி நுழைய முயன்றதால் அவர்கள் மீது காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி அங்கிருந்து கலைத்தனர்.
ஆர்சிபி அணியினரைப் பார்ப்பதற்காக மரங்கள் மற்றும் உயரமான சுவர்கள் மீதும், கட்டடங்கள் மீதும் ரசிகர்கள் ஏறியதாலும் அந்தப் பகுதி மிகுந்த பரபரப்பாக காணப்படுகிறது.
இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். நிகழ்விடத்திலேயே 3 பேர் பலியான நிலையில், 4 பேர் மருத்துவமனையில் பலியானதாகவும் உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சின்னசாமி திடல் நோக்கி மக்கள் அதிகம் செல்வதால், கப்பன் பூங்கா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மெட்ரோ நிலையம், விதான சவுதா ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ நிலையங்களில் கூட்ட நெரிசலைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
