வல்வெட்டித்துறை நகர சபை ‘சைக்கிள்’ வசம் – நகர பிதாவாக தவமலர் சுரேந்திரநாதன் தெரிவு.

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய நகர பிதாவாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைச் சேர்ந்த திருமதி. தவமலர் சுரேந்திரநாதன் தெரிவானார்.

வல்வெட்டித்துறை நகர சபையின் நகர பிதா, துணை நகர பிதா ஆகியோரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று வல்வெட்டித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

16 உறுப்பினர்களைக் கொண்ட வல்வெட்டித்துறை நகர சபைக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 7 ஆசனங்களையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி 5 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஓர் ஆசனத்தையும் கைப்பற்றின.

நகர பிதா பதவிக்காக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில்
போட்டியிட்ட திருமதி. தவமலர் சுரேந்திரநாதனுக்கு 7 பேரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட மகாலிங்கம் மயூரனுக்கு 6 பேரும் (தமிழரசு 5 + ஈ.பி.டி.பி. 1) ஆதரவு வழங்கினர்.

தேசிய மக்கள் சக்தியின் மூன்று உறுப்பினர்களும் வாக்களிப்பில் நடுநிலை வகித்தனர்.

துணை நகர பிதாவாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைச் சேர்ந்த நாகதம்பி பத்மநாதன் தெரிவானார்.

Leave A Reply

Your email address will not be published.