மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியோரை 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்த நடவடிக்கை – அவர்களைத் தேடிப் பொலிஸார் வலைவீச்சு

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியோரை
14 நாட்களுக்குத் தனிமைப்படுத்த நடவடிக்கை

– அவர்களைத் தேடிப் பொலிஸார் வலைவீச்சு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்துவதற்கு முன்னர் மேல் மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு புறப்பட்டவர்கள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இத்தத் கவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறிப்பாக நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்று மற்றும் நேற்றுமுன்தினம் ஆகிய இரு தினங்களில், மேல் மாகாணம் மற்றும் குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவிலிருந்து வேறு பிரதேசங்களுக்குச் சென்றவர்களை, அவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

இது தொடர்பில் தற்போது நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியதை அடுத்து திரள் திரளாக மேல் மாகாணத்திலிருந்து குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குப் பலரும் சென்றுள்ளனர். இந்தநிலையில் வெளிமாவட்டங்களிலிருந்து தொழிலுக்காக வந்து கொழும்பில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு சென்றிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலும் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து இவ்வாறு மேல் மாகாணத்திலிருந்து சென்றவர்கள் பற்றிய தகவல்களைப் பொலிஸார் தேடிவருகின்றனர்.

மேலும் அவர்கள் மீண்டும் திரும்புகின்ற சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்தல் சட்டம் அவர்கள் மீது பாயும் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.