அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து: கறுப்புப் பெட்டி தரவுகள் பதிவிறக்கம்!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் உள்பட 242 பேருடன் கடந்த ஜூன் 12 ஆம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் உள்பட 270 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நாட்டிலேயே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விபத்துக்கான காரணம் என்னவாக இருக்கும் பலரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டு அதில் உள்ள தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தரவுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் புதன்கிழமை பதிவிறக்கம் செய்யப்பட்டது. அந்த தரவுகளை பிரித்தெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த காரணங்களை கண்டறிவதன் மூலமாக விமானப் போக்குவரத்தை மேம்படுத்தவும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கவும் உதவும்” என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனால் விமான விபத்துக்கான காரணம் விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.