என் திட்டத்தை மாற்றினால் மீண்டும் பொருளாதார நெருக்கடி! – அநுர அரசுக்கு ரணில் எச்சரிக்கை.

“இலங்கையின் பொருளாதார மீட்சிக்காகச் சிறந்த திட்டத்தை அமுல்படுத்தினேன். அந்தத் திட்டத்தை அநுர அரசு முறையாகச் செயற்படுத்த வேண்டும். அரசியல் பிரபல்யத்துக்காக ஏற்றுக்கொண்ட இணக்கப்பாடுகளை மாற்றியமைத்தால் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படும்.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் படைக்கப்பட்ட நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே ரணில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையரறுகையில்,

“முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன ஐக்கிய தேசியக் கட்சி பற்றியே அதிகளவில் நூல்களை வெளியிட்டுள்ளார். அதுவும் நன்மைக்கே. ஏனெனில் 75 ஆண்டுகால அரசுகளை விமர்சிப்பவர்கள் இனியேனும் இவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இறப்பர் – அரிசி ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வெளிப்படுத்துகின்றது. 1953 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஏற்பட்ட அரிசித் தட்டுப்பாட்டைத் தொடந்தே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

சீனாவுடன் முதலாவதாக வர்த்தக ரீதியிலான ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்ட நாடாக இலங்கை காணப்படுகின்றது. இதனைத் தொடர்ந்தே இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு பலமடைந்தது.

பொருளாதார நெருக்கடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டிருந்தார். குறுகிய காலத்தில் பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களை அமுல்படுத்தியுள்ளேன். இந்தத் திட்டங்களை சிறந்த முறையில் அநுர அரசு செயற்படுத்தினால் நிலையான முன்னேற்றத்தை அடைய முடியும். அரசியல் பிரபல்யத்துக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை மாற்றியமைத்தால் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.