பெங்களூரு: பள்ளிப்பேருந்து கதவு மூடாததால் கீழே விழுந்து சிறுவன் பலி!

பெங்களூரு: பள்ளிப்பேருந்தில் கதவு சரியாக மூடாததால் பேருந்திலிருந்து கீழே விழுந்த சிறுவன் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் உயிரிழந்தார்.

பெங்களூரிலுள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்த எல். ராஜத் என்ற 7 வயது சிறுவன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

பெங்களூரிலுள்ள ஜனதா காலனி பகுதியில் அந்த மாணவனின் வீடு அமைந்துள்ளது. கொல்லேகல் பகுதியைச் சேர்ந்த அவரது பெற்றோர் கூலித் தொழிலாளிகளாக வேலை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், ராஜத்தும் அவரது சகோதரியும் வழக்கம்போல் கடந்த வெள்ளிக்கிழமையும்(ஜூலை 18) பள்ளியிலிருந்து பேருந்தில் தங்களது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ஓட்டுநர் ஆர். விநோத் (35) பள்ளிப் பேருந்தை இயக்கியுள்ளார்.

அந்த பேருந்தில் குழந்தைகளை கண்காணிக்க ஒரு பெண் பணியாளரும் இருந்திருக்கிறார். மொத்தம் 30 குழந்தைகள் பேருந்தில் சென்றதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், ராஜத்தும் அவரது சகோதரியும் வீட்டில் இறக்கிவிடப்படுவதற்கு முன்னரே, அந்த பெண் பணியாளர் பேருந்திலிருந்து இறங்கி தமது இல்லத்துக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், மேற்கண்ட இரு குழந்தைகளுடன் விநோத் வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்போது பேருந்தின் வாயிற்கதவு சரியாக மூடப்படாததால் வாயில் அருகே இருந்த சீட்டில் அமர்ந்திருந்த ராஜத்திடம், கதவை இழுத்து மூடும்படி விநோத் பணித்துள்ளார்.

அதன்படியே கதவருகே சென்ற ராஜத், பேருந்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் நிலைதடுமாறி பேருந்திலிருந்து வெளியே விழுந்துள்ளார். அதில் பேருந்தின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியுள்ளது.

உடனடியாக ராஜத்தை மீட்ட அக்கம்பக்க்த்தினர், அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனையொன்றில் அவரை சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள பேருந்து ஓட்டுநர் மீது பிணையில் வெளிவராத பிரிவுகளில் கொலை வழக்கு பதிந்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.