செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 3 எலும்புக்கூடுகள் அடையாளம் – மொத்த எண்ணிக்கை 88 ஆக உயர்வு.
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது மூன்று மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 88ஆக உயர்வடைந்துள்ளது.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 19 ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
நேற்றைய அகழ்வின் போது மூன்று மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஒன்பது என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 88 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 76 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்றில் இருந்து இரும்புகள் என நம்பப்படும் ஒரு தொகுதி கட்டிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை, நேற்றுமுன்தினம் அடையாளம் காணப்பட்ட சிறு போத்தல் ஒன்று நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மற்றும் கலைப்பீட தொல்லியல் துறை மாணவர்களும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றமை குறிப்பிடதக்கது.




