8 ஆண்களைத் திருமணம் செய்து ஏமாற்றிய பெண்: 9-வது திருமண முயற்சியின் போது கைது

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், எட்டுக்கும் மேற்பட்ட ஆண்களைத் திருமணம் செய்து, அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக கூறப்படும் ஒரு பெண்ணை காவல்துறை கைது செய்துள்ளது.

சமீரா ஃபாத்திமா என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்தப் பெண், ஒன்பதாவது நபரை திருமணம் செய்ய முயன்றபோது சிக்கியதாக கூறப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளாக இந்தச் செயலில் ஈடுபட்டு வந்த அவர், வசதியான, திருமணமான முஸ்லிம் ஆண்களை மட்டுமே குறிவைத்து ஏமாற்றி வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சமீரா பாத்திமா, திருமண இணையதளங்கள் மற்றும் ஃபேஸ்புக் மூலம் தனது இரைகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

தான் கணவனை இழந்தவர் என்றும், தனக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் உருக்கமான கதைகளைச் சொல்லி, அந்த ஆண்களின் அனுதாபத்தையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளார்.

திருமணம் முடிந்ததும், தனது கணவர்களை மிரட்டி, அவர்களிடம் இருந்து பெருமளவு பணத்தைப் பறித்து வந்துள்ளார்.

சமீரா பாத்திமா சிக்கியது எப்படி?
சமீரா பாத்திமாவின் முன்னாள் கணவர்களில் ஒருவர், அவரிடம் ₹50 லட்சம் மற்றும் மற்றொருவரிடம் இருந்து ₹15 லட்சம் என ரொக்கமாகவும், வங்கிப் பரிவர்த்தனைகள் மூலமாகவும் பணம் பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சமீரா ஒரு படித்த ஆசிரியை என்றும், இந்த மோசடிச் செயல்களைச் செய்ய ஒரு கும்பலுடன் சேர்ந்து செயல்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த முறை, தான் கர்ப்பமாக இருப்பதாக பொய் சொல்லி கைது நடவடிக்கையில் இருந்து தப்பியுள்ளார்.

ஆனால், ஜூலை 29 அன்று, நாக்பூரில் உள்ள ஒரு தேநீர்க் கடையில் தனது அடுத்த இலக்கை சந்திக்க முயன்ற போது, அவர் கைது செய்யப்பட்டார்.

காவல்துறை இந்த வழக்கை பதிவு செய்து, தொடர்ந்து விசாரித்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.