அடுத்த வருட முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தலை அநுர அரசு நடத்த வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து.

“ஆளுநர்கள் ஊடாக மாகாண சபைகளை ஆள்வது தவறாகும். எனவே, அடுத்த வருட முற்பகுதியில் அநுர அரசு தேர்தலை நடத்த வேண்டும்.”

இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு 5 வருடங்கள் போதாது, 15 வருடங்கள் தேவை என்று சீனத் தலைவர்கள் கூறினார்கள் என ஜே.வி.பின் செயலாளர் நாயகம் கூறியுள்ளார். 15 வருடங்கள் ஆள வேண்டுமெனில் அதற்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

குறைந்தபட்சம் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் மக்கள் எந்த நிலைப்பாட்டில் உள்ளனர் என்பது இந்த அரசுக்குத் தெரியவரும். எனவே, அடுத்த வருட முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அநுர அரசுக்குச் சவால் விடுக்கின்றோம்.

மாகாண சபை முறைமை என்பது அரசமைப்பின் ஓர் அங்கமாகும். எனவே, அந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே வடக்கு மற்றும் தெற்கு மக்களின் கோரிக்கையாக உள்ளது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.