தமிழர் தாயகத்தில் இராணுவ அடக்குமுறைக்கு எதிரான நாளைய ஹர்த்தாலுக்கு சகலரும் பூரண ஒத்துழைப்பு வழங்குங்கள் – யாழ். மாநகர மேயர் வேண்டுகோள்.

முல்லைத்தீவில் இராணுவத்தால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையைக் கண்டித்தும், அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம், இராணுவ அடக்குமுறை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாளை திங்கட்கிழமை வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாநகர மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழர் தாயகமாக வடக்கு – கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் காணப்படுகின்றது. இதை எதிர்த்து தமிழர் தாயகத்தில் நாளை திங்கட்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எமது தமிழர் பிரதேசங்களில் இராணுவ அடக்குமுறைகள் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். தமிழர் நிலங்களில் இருந்து இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும்.

சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் இராணுவத்தால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையைக் கண்டித்தும், அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம், இராணுவ அடக்குமுறை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாளை திங்கட்கிழமை வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.