ராஜஸ்தானில் திகில்: டிரம்மில் சடலம்; குடும்பத்தினர் மாயம் – நடந்தது என்ன?
இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள அல்வாரின் ஆதர்ஷ்நகர் காலனியில் வீட்டில் கொலை செய்யப்பட்டவரின் உடல் டிரம்மில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வாடகை வீட்டில் நபர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த வாடகை வீட்டின் மொட்டை மாடியில் உள்ள டிரம்மில் அழுகிய நிலையில் அந்த நபரின் சடலம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளர் வேலை ஒன்றிற்காக மொட்டை மாடிக்கு சென்றபோது துர்நாற்றம் வீசியுள்ளது.
அப்போது டிரம்மில் உள்ள சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் டிரம்மை திறந்து துர்நாற்றம் வீசிய உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், டிரம்மில் மீட்கப்பட்ட நபர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜ் என்றும், அவர் செங்கல் சூளையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இந்த சம்பவத்திற்கு பிறகு அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தான் ஹன்ஸ்ராஜ் ராஜஸ்தானின் வாடகைக்கு வீடு எடுத்து தனது மூன்று குழந்தைகள் மற்றும் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
இறந்தவரின் உடல் டிரம்மில் எவ்வளவு நேரம் இருந்தது அல்லது அவரது கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். அதோடு, அந்த நபரின் குடும்ப உறுப்பினர்களையும் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகின்றனர்.
