ஆந்திராவில் சோகம்: குளத்தில் மூழ்கி ஒரு சிறுமி உட்பட 6 குழந்தைகள் பலி!

ஆந்திரப் பிரதேசத்தின் கர்ணூல் மாவட்டத்தில், குளத்தில் மூழ்கி ஒரு சிறுமி மற்றும் 5 சிறுவர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ணூல் மாவட்டத்தின், சிகேலி கிராமத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்த 10 முதல் 11 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமி உள்பட 7 குழந்தைகள், இன்று (ஆக.20) காலை பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு திரும்பாமல், ஒன்றாக இணைந்து அங்குள்ள குளத்தில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், மழை அதிகரித்தபோது ஒரு குழந்தை குளத்தில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மூழ்கியவரை காப்பாற்ற முயன்ற மற்ற 5 குழந்தைகளும் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கியுள்ளனர்.

அப்போது, உயிர் பிழைத்த ஒரு சிறுவன் மட்டும் ஊருக்குள் ஓடிச் சென்று அங்குள்ளவர்களிடம் கூறியுள்ளார். தகவலறிந்து அங்கு விரைந்த ஊர்மக்கள் குளத்தில் மூழ்கிய குழந்தைகளைத் தேடியபோது அவர்கள் 6 பேரும் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குழந்தைகள் பலியான சம்பவம் கிராமவாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்துடன், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பலியான குழந்தைகளின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்ததுடன், அரசு அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.