ரணிலின் விடுதலைக்காகச் செயற்பட்ட அனைவருக்கும் சஜித் நன்றி தெரிவிப்பு.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சகல கட்சித் தலைவர்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் இதற்காக இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நன்றி தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்குப் பின்னர் எழுந்த ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட சவாலை வெற்றி கொள்வதற்கு அனைத்துக் கட்சிகளுடனும் கூட்டிணைந்த, தொடர்ச்சியான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

போராட்டத்தில் இணைந்து கொண்டவர்களை மிரட்டுவதற்கு அரசு பல்வேறு தந்திரோபாயங்களைக் கையாண்டது. இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்பவர்களுக்கு உடனடி சட்ட உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்குச் சட்டத்தரணிகள் குழாமொன்றை நிறுவ வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இதன்போது யோசனை முன்வைத்தார்.

இதன் பிரகாரம், இந்தக் குழாமை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி பெயரிடப்பட்டார். அதேபோல், இந்த அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் உட்பட பரந்தபட்ட ஒன்றிணைவைக் கட்டியெழுப்பத் தேவையான ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னெடுப்பதற்கு முன்னாள் அமைச்சர் லசந்த அழகியவண்ண மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய ஆகியோர் பெயரிடப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.