யாழ். விஜயத்தின்போது புலனாய்வு அதிகாரிகளை அதிரவைத்த ஜனாதிபதி.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு நேற்று வந்திருந்த நிலையில், அவர் எப்போது யாழ்ப்பாணம் வருகின்றார்? யாழ்ப்பாணத்தில் எங்கு தங்கியிருக்கின்றார்? என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகள் உட்பட அரச பெருந்தலைகள் எவருக்கும் தெரியாமல் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது, முதலாவது நிகழ்வாக காலை 10 மணிக்கு மயிலிட்டி துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதாக இருந்தது. ஜனாதிபதியின் பயணத்தை முன்னிட்டுப் புலனாய்வாளர்கள் உச்சக்கட்டக் கண்காணிப்பைச் செலுத்தியிருந்தனர். இதனால், 31ஆம் திகதி நள்ளிரவே ஜனாதிபதி இராணுவக் காவலரண்களை தாண்டிவிட்டார் என்ற தகவல் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது. எனினும், யாழ்ப்பாணத்துக்குள் ஜனாதிபதி நுழைந்துவிட்டாரா? அவர் எங்கு சென்றார்? என்று அவர்களால் தொடர்ச்சியாக அறியமுடியவில்லை.

இந்த விடயங்கள் தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியாத நிலையில் நேற்று அதிகாலை பாதுகாப்பு வட்டாரங்களிலும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளுக்காக எந்த வாகனத் தொடரணியும் இல்லாமல் தனி வாகனத்தில் ஜனாதிபதி சென்று இறங்கியபோதே, ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில்தான் தங்கியிருந்தார் என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகளுக்கும் அரச வட்டாரங்களுக்கும் தெரியவந்துள்ளது.

அநுரகுமார ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கு முன்னர், யாழ்ப்பாணத்துக்கு வரும்போதெல்லாம் தட்டாதெருச் சந்திக்கு அருகாக உள்ள வீடொன்றில் தங்கியிருப்பதே வழமை. இம்முறையும் அந்த வீட்டில் சென்றே தங்கியிருந்துள்ளார் என்று தெரியவருகின்றது.

ஜனாதிபதிக்கும் அரச புலனாய்வு அதிகாரிகளுக்கும் இடையில் ஒரு இடைவெளி காணப்படுகின்றதாக அண்மைக்காலமாக அரசல் புரசலாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான பாதுகாப்புப் படையணியே அவரின் பாதுகாப்பு விடயங்களை முற்றாகக் கையாண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்தத் தகவல்களை உண்மையாக்கும் வகையிலேயே இந்தச் சம்பவமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
………………………

Leave A Reply

Your email address will not be published.