உத்தரப்பிரதேச கிராமத்தில் பீதி: பெண்களைக் கடத்த முயலும் நிர்வாணக் கும்பல் – காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை

உத்தர பிரதேசத்தில் பெண்களை கடத்த முயற்சிக்கும் நிர்வாண கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் பராலா கிராமத்தில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரை நிர்வாணமாக ஓடிவந்த இரு ஆண்கள் வயலுக்குள் இழுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர். இருப்பினும், அந்தப் பெண் சுதாரித்துக் கொண்டு கூச்சலிட்டதுடன், அவர்களிடமிருந்து தப்பித்தும் விட்டார். கடத்த முயன்றவர்களும் வயலுக்குள் தப்பியோடி விட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கூச்சல் கேட்ட பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தபோதிலும், கடத்த முயன்றவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. கடத்த முயன்றவர்களின் அடையாளங்கள் குறித்து பெண்ணிடம் வினவப்பட்ட போதிலும், அவர்கள் நிர்வாணமாக இருந்ததாக மட்டுமே கூறினார்.

இதனையடுத்து, காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்தில் ட்ரோன் மூலம் சோதனை செய்யப்பட்டது.

இருப்பினும், இது முதல்முறை அல்ல; ஏற்கெனவே மூன்று முறையும் இத்தோடு நான்காவது என்றும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். நிர்வாணமான ஆண்கள் கடத்திச் செல்வது குறித்து வெளியில் சொல்வது என்பது அவமானம் என்று பாதிக்கப்பட்டவர்கள் கருதியுள்ளனர். இந்த நிலையில்தான், நான்காவது முயற்சியில் வெளிவந்துள்ளது.

இதுவரையில், பெண்களை மட்டுமே குறிவைத்து அவர்கள் கடத்த முற்பட்டுள்ளனர். வயல்களைச் சுற்றிவளைத்து சோதனை, ட்ரோன்கள், சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டும் சந்தேகப்படும்படியாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றே காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்த சம்பவமானது பெண்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.